வெள்ளகோவில் அருகே கடன் பிரச்சினையால் விஷ மாத்திரை தின்ற தம்பதி பெண் சாவு; கணவருக்கு தீவிர சிகிச்சை


வெள்ளகோவில் அருகே கடன் பிரச்சினையால் விஷ மாத்திரை தின்ற தம்பதி பெண் சாவு; கணவருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 14 Oct 2020 3:39 AM GMT (Updated: 14 Oct 2020 3:39 AM GMT)

வெள்ளகோவில் அருகே கடன் பிரச்சினை காரணமாக தம்பதி விஷம் குடித்தனர். இதில் பெண் உயிரிழந்தார். கணவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பூமான்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55). விவசாயி. இவரது மனைவி ராதாமணி(51). இவர்களது மகன் ரமேஷ்குமார் (30). இவருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மலேசியாவில் கணினி என்ஜினீயராக பணியாற்றி விட்டு தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக ஊர் திரும்பி விட்டார். தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடன் பிரச்சினை காரணமாக பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி ராதாமணி இருவரும் சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை பழனிச்சாமியும், ராதாமணியும் தென்னை மரத்திற்கு வைக்கும் சல்பாஸ் என்கிற விஷ மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கிடந்தனர்.

இதை அறிந்த ரமேஷ்குமார், தனது பெற்றோரை உனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி ராதாமணி இறந்துவிட்டார். பழனிச்சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story