பெரியகுளம் அருகே முன்விரோதத்தில் பயங்கரம்: என்ஜினீயர் கத்தியால் குத்திக்கொலை - தொழிலாளி கைது


பெரியகுளம் அருகே முன்விரோதத்தில் பயங்கரம்: என்ஜினீயர் கத்தியால் குத்திக்கொலை - தொழிலாளி கைது
x
தினத்தந்தி 15 Oct 2020 12:40 AM GMT (Updated: 15 Oct 2020 12:40 AM GMT)

பெரியகுளம் அருகே முன்விரோதத்தில் என்ஜினீயர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். அவருடைய மகன் சரவணவிசாகன் (வயது 29). என்ஜினீயரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள கமிஷன் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கொரோனா பரவல் எதிரொலியாக, கடந்த சில மாதங் களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சரவணவிசாகன் வந்து விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடை அருகே, தனது நண்பர்களுடன் சரவணவிசாகன் பேசி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியும், சரவணவிசாகனின் நண்பருமான சரவணக்குமார் (30) என்பவர் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சரவணக்குமார், அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்தார். மேலும் சரவணவிசாகனிடமும் அவர் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சரவணக் குமார், தான் வைத்திருந்த கத்தியால் சரவணவிசாகனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சரவணவிசாகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சரவணவிசாகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக் குமாரை கைது செய்தனர்.

இதற்கிடையே சரவண விசாகனின் உறவினர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். மேலும் பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

பின்னர் போலீசார், சரவணவிசாகனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கைதான சரவணக்குமாருக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில், சரவணவிசாகனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து சரவண விசாகனின் உடல், பிரேத பரிசோதனை செய்வதற்காக அங்கிருந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கைது செய்யப்பட்ட சரவணக்குமார் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Next Story