தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2020 10:15 AM GMT (Updated: 15 Oct 2020 10:07 AM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகையை சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் ஜெயகாந்தன் தீபாவளி தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைக்க முதல் விற்பனையை வசுமதி முத்துக்கண்ணன் பெற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு உதவிடும் வகையில் அவர்கள் உற்பத்தி செய்யும் சேலை, துணிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறது. மேலும் கைத்தறி விற்பனையை அதிகரிக்க ஆண்டு வரும் பண்டிகை காலங்களில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பல்வேறு புதிய ரகங்கள் மற்றும் செட்டிநாடு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சத்து 22 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.70 லட்சத்திற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தாண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி ரகங்களை இணையதளம் மூலமும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மேலாளர்கள் ஞானப்பிரகாசம், முல்லைக்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story