முதுகுவலியால் அவதிப்பட்டதால் நடிகை ராகிணிக்கு சிறை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்


முதுகுவலியால் அவதிப்பட்டதால் நடிகை ராகிணிக்கு சிறை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 15 Oct 2020 10:01 PM GMT (Updated: 15 Oct 2020 10:01 PM GMT)

போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ராகிணி முதுகுவலியால் அவதிப்பட்டதால், அவருக்கு சிறை ஆஸ்பத்திரியிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி, அவரது சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர். பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வரும் ராகிணியும், சஞ்சனாவும் முதலில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் உண்டானதால், ராகிணியும், சஞ்சனாவும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ராகிணியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதும், சிறையில் இருந்து வெளியே வருவதற்காக தனக்கு முதுகுவலி இருப்பதாகவும், அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரி, அவரது சார்பில் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சிறை ஆஸ்பத்திரியிலேயே அவர் சிகிச்சை பெற கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனால் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் ராகிணி ஏமாற்றம் அடைந்தார்.

முதுகுவலியால் அவதி

இந்த நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் நடிகை ராகிணி நேற்று முன்தினம் இரவு முதுகுவலியால் அவதிப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தனக்கு முதுகுவலி அதிகமாக இருப்பதாகவும், தன்னை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும்படியும் சிறை அதிகாரிகளிடம் ராகிணி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் நடிகை ராகிணி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து, அவருக்கு முதுகுவலி சரியானதாக தெரிகிறது. அதே நேரத்தில் சிறை ஆஸ்பத்திரி வேண்டாம் என்றும், தன்னை வேறு மருத்துவமனையில் சேர்க்கும்படியும் அதிகாரிகளிடம் ராகிணி கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடிகை ராகிணியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று ராகிணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story