பிளஸ்-2 மாணவி கடத்தி கற்பழிப்பு: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


பிளஸ்-2 மாணவி கடத்தி கற்பழிப்பு: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 16 Oct 2020 1:14 AM GMT (Updated: 16 Oct 2020 1:14 AM GMT)

ஒட்டன்சத்திரம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி கற்பழித்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு மகிளா நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள லக்கையன்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று கற்பழித்து விட்டார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர், கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். அதோடு கடத்தப்பட்ட மாணவி மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து, நீதிபதி புருஷோத்தமன் நேற்று தீர்ப்பளித்தார்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு மாணவியை கடத்திய குற்றத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், மேலும் மாணவியை கற்பழித்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அதில் 6 மாதங் கள் தனி சிறையில் அடைக்கும்படியும் உத்தரவிட்டார்.

Next Story