பெட்டிகளில் பதுக்கிய ரூ.3¼ கோடி-3½ கிலோ தங்கம் பறிமுதல்: சுற்றுச்சூழல் பொறியாளர் அதிரடியாக பணி இடைநீக்கம்


பெட்டிகளில் பதுக்கிய ரூ.3¼ கோடி-3½ கிலோ தங்கம் பறிமுதல்: சுற்றுச்சூழல் பொறியாளர் அதிரடியாக பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 16 Oct 2020 9:15 AM GMT (Updated: 16 Oct 2020 9:00 AM GMT)

பெட்டிகளில் பதுக்கிய ரூ.3¼ கோடி-3½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சுற்றுச்சூழல் பொறியாளர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை,

வேலூர் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இணை முதன்மை பொறியாளராக பன்னீர்செல்வம் (வயது 45) பணியாற்றி வருகிறார். இவர் தொழிற்சாலைகள் தொடங்க உரிமம் வழங்குவதற்கும், தொழிற்சாலைகளின் உரிமங்களை புதுப்பிப்பதற்கும் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான அனைத்து சான்று பெறுவதற்கும், விண்ணப்பம் செய்பவர்களிடமிருந்து லஞ்சம் வாங்கி சொத்துக்கள் வாங்கி குவிந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் கடந்த 13-ந் தேதி சோதனையிட்டனர். அப்போது ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராணிப்பேட்டை, பெல் நகரிலுள்ள அவரது வீட்டை லஞ்சஒழிப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணி அளவில் தொடங்கிய சோதனை, இரவு முழுவதும் நடைபெற்று, நேற்று காலை 6 மணி வரை 19 மணிநேரம் நீடித்தது. இந்த சோதனையில் பன்னீர்செல்வத்தின் வீட்டில் இரும்பு பெட்டிகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் 6 எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

மேலும் 3½ கிலோ தங்கம், 6½ கிலோ வெள்ளி ஆகியவையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாங்கப்பட்ட சொத்துக்களின் பத்திரங்களும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இவற்றை 4 இரும்பு பெட்டிகளிலும், சூட்கேஸ்களிலும் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச்சென்றனர்.

வேலூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரி ஒருவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு இதுதான் அதிகம் என கூறப்படுகிறது. இந்த பணம், நகைகள், சொத்துப்பத்திரங்கள் பன்னீர்செல்வத்துக்கு எந்த வழியில் வந்தன என்பது குறித்து விசாரணை டந்து வருகிறது. இதனிடையே பொறியாளர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story