காளையார்கோவிலில் நடைபெறும் மருதுபாண்டியர்கள் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கவேண்டும் - மூவேந்தர் முன்னேற்ற கழகம் கோரிக்கை


காளையார்கோவிலில் நடைபெறும் மருதுபாண்டியர்கள் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கவேண்டும் - மூவேந்தர் முன்னேற்ற கழகம் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2020 10:30 AM GMT (Updated: 16 Oct 2020 10:37 AM GMT)

காளையார்கோவிலில் நடைபெறும் மருதுபாண்டியர்கள் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கவேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை,

மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளரும் சிவகங்கை மாவட்ட தலைவருமான நாகலிங்கம், மாவட்டசெயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஆகியோர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த மன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை வருகிற 27-ந் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலிலும் மற்றும் வருகிற 28 முதல் 30-ந்தேதி முடிய ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜையின்போது மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்காமல் வழக்கம்போல நடைபெற அனுமதி வழங்க வேண்டும். மேலும் அஞ்சலி செலுத்த வருபவர்கள் சமூக இடைவெளியுடன் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து அஞ்சலி செலுத்த தயாராக இருக்கிறோம்.

எனவே 2 குருபூஜை விழாக்களுக்கும் ஆண்டுதோறும் தமிழக அரசு எவ்வாறு அனுமதி வழங்கி வருகிறதோ அதேபோல இந்த ஆண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story