சப்-இன்ஸ்பெக்டர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்: அதிகாரிகள் உறுதிமொழியால் முடிவுக்கு வந்த போராட்டம்


சப்-இன்ஸ்பெக்டர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்: அதிகாரிகள் உறுதிமொழியால் முடிவுக்கு வந்த போராட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2020 11:00 AM GMT (Updated: 16 Oct 2020 10:50 AM GMT)

போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டதை கைவிட்டனர்.

பேரையூர்,

பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ரமேஷ். கடந்த மாதம் 16-ந் தேதி சாப்டூர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரமேஷ் மறுநாள் காலையில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அந்த கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்கண்ணன் மற்றும் பரமசிவம் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்களும் மீண்டும் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் பணிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் ரமேசின் சாவுக்கு காரணமாக இருந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்களையும் மீண்டும் பணியில் சேர்த்துள்ளனர். போலீசார் வேண்டுமென்றே நாடகமாடி எங்களை ஏமாற்றி விட்டனர். எனவே அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நீக்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ரமேசின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அணைக்கரைப்பட்டியில் உள்ள நாடக மேடை முன்பு நேற்று முன் தினம் கண்ணில் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதைதொடர்ந்து அரசு தங்களது போராட்டங்களை கண்டுகொள்ளவில்லை என்று கூறி நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கிராமத்தில் இருந்து ஒன்று திரண்டு பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்னர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றும் இவர்களின் போராட்டம் தொடர்ந்தது. மாலை 4 மணி வரை தங்கள் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்று தாலுகா அலுவலக கேட்டை இழுத்து பூட்டினார்கள். மேலும் தாலுகா அலுவலக ஊழியர்களை வெளியே செல்லவிடாமல் மறித்தனர். இதுகுறித்து சம்பவம் அறிந்து கோட்டாட்சியர் ராஜ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், தாசில்தார் சாந்தி ஆகியோர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் ரமேசின் சகோதரருக்கு அரசு பணி வழங்கப்படும், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள், ரமேஷ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது. இதனால் 27 மணி நேரமாக நடைபெற்ற தொடர் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story