தேசூர் அருகே, 100 கேன் எரிசாராயத்துடன் லாரி பறிமுதல் - 2 பேர் கைது


தேசூர் அருகே, 100 கேன் எரிசாராயத்துடன் லாரி பறிமுதல் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2020 11:00 AM GMT (Updated: 16 Oct 2020 11:18 AM GMT)

தேசூர் அருகே விழுப்புரத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 100 கேன் எரி சாராயத்துடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேத்துப்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தேசூரை அடுத்த சீமாபுதூர்- செங்கம்பூண்டி செல்லும் சாலையில் உள்ள வாழைத்தோட்டத்தின் அருகில் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாரியில் எரிசாராயம் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்துக்கு தகவல் கிடைத்தது.

அவருடைய உத்தரவின்பேரில் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கரராமன், தேசூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சென்று லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 50 லிட்டர் கொண்ட 100 கேன்களில் எரிசாராயம் இருந்தது.

லாரியில் 3 பேர் இருந்தனர். போலீஸ் வருவதை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டையை சேர்ந்த அண்ணாமலை (வயது41), திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள எரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (20) என்பது தெரியவந்தது.

மேலும் விழுப்புரம் பகுதியில் இருந்து அவலூர்பேட்டைக்கு எரிசாராயம் கடத்தியதும் தெரிந்தது. அதைத்தொடர்ந்து 100 கேன் எரிசாராயத்துடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய செங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவரை போலீசார்தேடிவருகின்றனர்.

Next Story