நூதனமாக சாராயம் விற்ற டிரைவர் கைது - ஆட்டோ பறிமுதல்


நூதனமாக சாராயம் விற்ற டிரைவர் கைது - ஆட்டோ பறிமுதல்
x
தினத்தந்தி 16 Oct 2020 11:45 AM GMT (Updated: 16 Oct 2020 11:38 AM GMT)

வாணியம்பாடியில் நூதனமாக சாராயம் விற்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி, 

வாணியம்பாடி முஸ்லிம்பூர் ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சையத் என்கிற கலிமுல்லா (வயது 45), டிரைவர். இவர், சொந்தமாக ஆட்டோ வைத்திருந்தார். அந்த ஆட்டோவில் நூதனமாக சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கலிமுல்லாவின் ஆட்டோவை கண்காணித்து வந்தனர்.

அப்போது முஸ்லிம்பூர் பகுதியில் ஆட்டோவை மறித்து போலீசார் சோதனை செய்தபோது, ஓட்டுனர் இருக்கைக்கு அடியில் விற்பனைக்காக சாராய பாக்கெட்டுக்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்செல்வதுபோல் நடித்து, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தெரு கோடியில் ஆட்டோவை நிறுத்தி, நூதனமாக சாராய விற்பனை செய்து வந்தார்.

ஒருசில நேரத்தில் இவரே மது பிரியர்களுக்கு போன் செய்தும், சில மது பிரியர்கள் இவருக்கு போன் செய்தும் சாராய விற்பனை செய்து வந்தார். இப்படி பல நாட்களாக வாணியம்பாடி முழுவதும் ஆட்டோவிலேயே சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story