‘தி.மு.க. கோட்டை கலகலத்து கொண்டு இருக்கிறது’ பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் பேட்டி


‘தி.மு.க. கோட்டை கலகலத்து கொண்டு இருக்கிறது’ பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2020 2:00 PM GMT (Updated: 16 Oct 2020 2:25 PM GMT)

‘தி.மு.க. கோட்டை கலகலத்து கொண்டு இருக்கிறது’ என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறினார்.

திருவாரூர்,

தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சீனிவாசன் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தார்.

திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்தில் பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், செயலாளர் வரதராஜன், மாவட்ட தலைவர் ராகவன், நாகை மாவட்ட பார்வையாளர் சிவா, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணை செயலாளர் பெரோஸ்காந்தி, மாநில விவசாய அணி செயலாளர் சந்துரு, மாவட்ட துணைத்தலைவர் செந்தில் அரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அடுத்த மாதம்(நவம்பர்) 6-ந் தேதி திருத்தணியில் இருந்து மாநில தலைவர் முருகன் தலைமையில் வெற்றிவேல் யாத்திரை தொடங்கிட திட்டமிட்டுள்ளது. ஒரு மாதம் ஆன்மிக பயணம் மேற்கொண்டு டிசம்பர் மாதத்தில் திருச்செந்தூரில் நிறைவு செய்ய உள்ளோம். கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி இழிவுப்படுத்தி பேசிய பிறகு அதனை முக்கியமான அரசியல், சமூக பிரச்சினையாக பா.ஜனதா பார்க்கிறது.

தமிழகத்தில் கருப்பர் கூட்டம் தேச விரோதமாக, இந்து விரோதமாக செயல்படுகிறது. இந்த நிலையில் வெற்றிவேல் யாத்திரை தமிழகத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும். தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா, தனித்தே போட்டியிடுவதாக நினைத்துத்தான் களப்பணி ஆற்றி வருகிறோம். கூட்டணி என்று வந்தால் அதனை ஏற்றுக்கொள்வோம். அதுவே பா.ஜனதா கட்சியின் தேர்தல் அணுகுமுறையாகும். உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட்டால், பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு மாபெரும் வெற்றி பெறுவோம்.

மாநில தலைவர் முருகன் குறித்து டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்து இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், மாநில தலைவர் முருகன் பொறுப்பேற்ற பிறகுதான் தி.மு.க. மூத்த தலைவர் வி.பி.துரைசாமி பா.ஜனதாவில் இணைந்தார். எனவே தி.மு.க.வின் கோட்டை கலகலத்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரடாச்சேரி ஒன்றியம் கிளறியத்தில் பா.ஜ.க. கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோட்டூர் ராகவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கொடியேற்றினார். முன்னதாக ஒன்றிய தலைவர் அட்சயா முருகேசன் வரவேற்றார். முடிவில் பட்டியல் அணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

நீடாமங்கலத்திற்கு வந்த சீனிவாசனுக்கு பா.ஜ.க.வின் நீடாமங்கலம் ஒன்றியத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் தமிழ்வேந்தன், கண்கார்த்தி, வாஞ்சி மோகன் மற்றும் பலர் வரவேற்பு அளித்தனர்.

Next Story