குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் 26-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் 26-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது
x
தினத்தந்தி 16 Oct 2020 4:45 PM GMT (Updated: 16 Oct 2020 4:45 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் நாளான வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1, 10, 11-ம் திருவிழா நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 2 முதல் 9-ம் திருவிழா வரையிலும், விழாவின் நிறைவு நாளிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அரசின் வழிகாட்டுதல்படி தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நாளை கொடியேற்றம்

தசரா திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் நாளை (சனிக்கிழமை) காலை 10.45 மணிக்கு கொடிப்பட்டம் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து, கோவில் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து கொடிமரத்துக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

வழக்கமாக கோவிலில் கொடியேற்றம் நடந்ததும், விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு கோவில் அர்ச்சகர், மஞ்சள் கயிறு காப்பு அணிவிப்பார். மேலும் பல்வேறு ஊர்களில் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக, தசரா குழு நிர்வாகிகள் காப்புகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கொடியேற்ற விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

வேடம் அணியும் பக்தர்கள்

ஒவ்வொரு ஊரிலும் பதிவு செய்யப்பட்ட தசரா குழு நிர்வாகிகள், 2 முதல் 9-ம் திருவிழா வரையிலும் குலசேகரன்பட்டினம் கோவில் அலுவலகத்தில் மஞ்சள் கயிறு காப்புகளை மொத்தமாக வாங்கி சென்று, தங்களது ஊர்களில் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

காப்பு அணிந்து கொண்டு, வேடம் அணியும் பக்தர்கள் அந்தந்த ஊர்களிலேயே காணிக்கை வசூலித்து, விழா நிறைவு நாளில் அல்லது அதற்கு பின்னர் கோவிலில் வந்து செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். தொடர்ந்து இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

26-ந்தேதி, சூரசம்ஹாரம்

10-ம் நாளான வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.15 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் முன்பு மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

11-ம் நாளான 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சூரசம்ஹாரம் முடிந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பின்னர் அம்மன் கோவிலைச் சுற்றி வலம் வந்து, மீண்டும் கோவிலை சேர்கிறார். தொடர்ந்து அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்பட்டதும், விரதம் இருந்து வரும் பக்தர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் தங்களது காப்புகளை அவிழ்த்து விரதத்தை முடிக்கின்றனர்.

யூ-டியூப்பில் ஒளிபரப்பு

விழாவின் நிறைவு நாளான 28-ந்தேதி (புதன்கிழமை) மதியம் அம்மனுக்கு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்து யூ-டியூப் இணையதளம் வழியாகவும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story