எர்ணாகுளம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்


எர்ணாகுளம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்
x
தினத்தந்தி 17 Oct 2020 2:24 AM GMT (Updated: 17 Oct 2020 2:24 AM GMT)

எர்ணாகுளம் அருகே கணவர் கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி பலியானார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

பாலக்காடு,

எர்ணாகுளம் மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(வயது 36). இவருடைய மனைவி செல்வி(33). இவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். மேலும் பந்திரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். செல்வி தனது வீட்டின் அருகில் உள்ள நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏறி வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை அவர் வழக்கம்போல் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றார். அப்போது அவருடன் அவரது கணவர் மனோஜூம் சென்றார். இதையடுத்து அந்த நிறுத்தத்துக்கு பந்திரூர் பகுதிக்கு செல்லும் பஸ் வந்தது. தொடர்ந்து முன் வாசல் வழியாக பஸ்சுக்குள் ஏற செல்வி முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. அப்போது நிலைதடுமாறிய செல்வி கீழே தவறி விழுந்தார். லாரி மோதியதால் சில அடி தூரம் பஸ் நகர்ந்து சென்றது.

இதனால் கீழே விழுந்து கிடந்த செல்வி மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மனோஜ் கதறி அழுதார். இது காண்போரின் கண்களை குளமாக்கியது. பின்னர் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அடூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரின் கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story