பாலியல் வன்கொடுமை புகார்களை உடனுக்குடன் விசாரிக்க வேண்டும் கலெக்டர் சிவன்அருள் பேச்சு


பாலியல் வன்கொடுமை புகார்களை உடனுக்குடன் விசாரிக்க வேண்டும் கலெக்டர் சிவன்அருள் பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2020 3:52 AM GMT (Updated: 17 Oct 2020 3:52 AM GMT)

பாலியல் வன்கொடுமை குறித்த புகார்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சிவன்அருள் கேட்டுக்கொண்டார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்டத் துறையின் சார்பாக மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திருமண வயது, குழந்தை திருமணத்தால் பெண்களுக்கு எதிர்காலத்தில் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள், பெண் கல்வியால் ஏற்படும் நன்மைகள், பெண்களுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தை திருமணம் செய்ய மாட்டேன், குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பேன் என்ற உறுதிமொழியை பெற்று அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் கண்காணிப்புக்குழு ஏற்படுத்தி பணியாற்ற வேண்டும்.

குறிப்பாக மலைப்பகுதி, பின்தங்கிய பகுதிகள் ஆகிய இடங்களில் பணிகளை செம்மையாக செய்ய வேண்டும். மேலும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பாலியல் துன்புறுத்தல் குறித்து இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை குறித்த புகார்கள் உடனுக்குடன் விசாரணை செய்து காவல்துறை மற்றும் குழந்தை பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் கலைவாணன், மாவட்ட குழந்தைகள் நன்னடத்தை அலுவலர் செல்வி, குழந்தை பாதுகாப்பு அலுவலர் சுபாஷினி, குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்ட இயக்கம் செந்தில்குமார், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், சாந்தி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, எஸ்.ஆர்.டி.பி.எஸ். இயக்குனர் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story