கீழ்பென்னாத்தூரில் கல்லால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை கடைகள் அடைப்பு; போலீஸ் குவிப்பு


கீழ்பென்னாத்தூரில் கல்லால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை கடைகள் அடைப்பு; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2020 3:58 AM GMT (Updated: 17 Oct 2020 3:58 AM GMT)

கீழ்பென்னாத்தூரில் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாதோப்பு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் குருபரன் (வயது 21). திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டுபடித்து வந்தார். கீழ்பென்னாத்தூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் மனோகரன். மரக்கடை வைத்துள்ளார். இவரது மகன் தீனா (21). நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கீழ்பென்னாத்தூர்- கருங்காலி குப்பம் ரோட்டில் உள்ள கறிக்கடை ஒன்றில் குருபரன் கறி வாங்கிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் ராஜாதோப்புக்கு வந்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென தீனா குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது மோதமல் இருக்க குருபரன் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார். தீனா அருகில் சென்று மோட்டார்சைக்கிள் நின்றதால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குருபரனை, தீனா தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இதையடுத்து குருபரன் தனது நண்பரான மேல்பாப்பம்பாடியை சேர்ந்த ஜெமினியிடம் நடந்த தகராறு குறித்து கூறி அவரை அழைத்துச்சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் உள்ள நிழற்குடையில் இருந்த குருபரனிடம் எதற்காக தகராறு செய்து அசிங்கமாக பேசினாய் என்று கேட்டதாகவும், அப்போது வாய்த் தகராறு முற்றி, ஆத்திரமடைந்த தீனா செங்கல்லை எடுத்து குருபரன் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த குருபரன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து வரும் வழியிலேயே குருபரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீனாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குருபரன் கொலை செய்யப்பட்டதும் கீபென்னாத்தூரில் கடைகள் அடைக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட குருபரனும், கொலை செய்த தீனாவும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அசம்பாவிதம் நடை பெறாமல் இருக்க அதிரடி போலீசார் கீழ்பென்னாத்தூருக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தகவலறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Next Story