மதுரை அருகே பயங்கரம்: 2 பேரை அடுத்தடுத்து கொன்ற கொடூர கும்பல் ஆட்டோ டிரைவர் மாயம் பற்றிய விசாரணையில் 2 சம்பவங்களும் அம்பலம்


மதுரை அருகே பயங்கரம்: 2 பேரை அடுத்தடுத்து கொன்ற கொடூர கும்பல் ஆட்டோ டிரைவர் மாயம் பற்றிய விசாரணையில் 2 சம்பவங்களும் அம்பலம்
x
தினத்தந்தி 17 Oct 2020 8:30 AM GMT (Updated: 17 Oct 2020 5:10 AM GMT)

மதுரை அருகே 2 பேரை அடுத்தடுத்து 5 பேர் கும்பல் கொலை செய்தது. ஆட்டோ டிரைவர் மாயம் பற்றிய போலீஸ் விசாரணையில் 2 சம்பவங்களும் அம்பலமானது.

திருப்புவனம்,

மதுரையை அடுத்த திருப்புவனம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 22). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 13-ந்தேதி மாலையில் இருந்து விஜயையும், அவரது ஆட்டோவையும் காணவில்லை. உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் நேற்று முன்தினம் விஜய்யின் தாயார் செல்ல மீனா திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்தநிலையில் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் லாடனேந்தல் பாலத்தின் அருகே தென்னந்தோப்பு பகுதியில் ஒரு ஆட்டோ தன்னந்தனியாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்த போது, அந்த ஆட்டோ விஜய்க்கு சொந்தமானது என தெரியவந்ததால் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் விஜய் செல்போனுக்கு யார், யார்? போன் செய்துள்ளார்கள் என ஆய்வு செய்த போது, அவருக்கு கடந்த 13-ந்தேதி மாலையில் திருப்புவனம் ரெயில்வே பீடர்ரோடு பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார்(19) கடைசியாக பேசியது தெரியவந்தது.

இந்த நிதிஷ்குமார் உள்பட 5 பேர் கும்பலால்தான் விஜய் கொல்லப்பட்டார் என்ற தகவலும், அதே கும்பல் கணேசன் (36) என்பவரையும் வெட்டிக் கொலை செய்த விவரமும் போலீசாருக்கு தெரியவந்ததால் விசாரணை பரபரப்பானது.

2 பேரும் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் அளித்த விளக்கம் வருமாறு:-

ஏற்கனவே விஜய்யின் ஆட்டோவில் நிதிஷ்குமார் பயணித்துள்ளார். அப்போது ஆட்டோ வாடகை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி மாலையில் நிதிஷ்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 4 பேரும், விஜய்யின் ஆட்டோவை வாடகைக்கு பேசி லாடனேந்தலுக்கு சென்றுள்ளனர். அப்போது கோனப்பாலம் அருகே சென்றபோது ஏற்கனவே இருந்த முன்விரோதத்தில் பழிதீர்க்க விஜய்யை அவர்கள் 5 பேரும் தாக்கி, வைகை ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்று பயங்கர ஆயுதங்களால் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

அதன்பின்னர் விஜய்யின் உடலை அங்கேயே போட்டு விட்டு, அவரது ஆட்டோவை தென்னந்தோப்பில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது பற்றி தெரியவந்ததும் நிதிஷ்குமாரின் கூட்டாளியான பிரகாஷ்ராஜை கைது செய்து, அவரை அழைத்துக் கொண்டு கொலை நடந்த இடத்தை பார்வையிட்டோம். கொலை செய்யப்பட்டு 4 நாட்கள் ஆனதால் அழுகிய நிலையில் கிடந்த விஜய்யின் உடல் மற்றும் தலையை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தோம்.

மேலும் விஜய் கொலையில் தொடர்புடையவர்கள் பற்றிய விசாரணையின் போதுதான், கணேசன் என்பவரும் இதே கும்பலால் கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது.

அதாவது, நரிக்குடி விலக்கில் உள்ள பிள்ளையார்கோவில் எதிர்ப்புறத்தில் வாழைப்பழ கடையை கணேசன் நடத்தி வந்தார். அப்போது அவருக்கும், நிதிஷ்குமாரின் நெருங்கிய கூட்டாளியான திருப்புவனம் புதூரைச் சேர்ந்த தினேஷ்குமாருக்கும் (20) முன்விரோதம் இருந்துள்ளது.

எனவே கணேசனை தேடி, தினேஷ்குமார், நிதிஷ்குமார் உள்பட 5 பேர் சம்பவத்தன்று சென்றுள்ளனர். வாழைப்பழ கடையில் கணேசனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி உள்ளனர். அப்போது கணேசன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் அவரை விரட்டிச்சென்று கணேசனை பயங்கர ஆயுதங்களால் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதில் படுகாயம் அடைந்த கணேசனை அவரது உறவினர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளிகளை திருப்புவனம் நகர் மற்றும் வட்டார பகுதியில் போலீசார் விடிய, விடிய தேடினர்.

இந்தநிலையில் போலீசார் தேடுவதை அறிந்த தினேஷ்குமார், நிதிஷ்குமார், சரவணன், அகீம்கான் ஆகிய 4 பேரும் மதுரை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்துவிட்டனர். பிரகாஷ்ராஜை ஏற்கனவே பிடித்துவிட்டோம்.

இவ்வாறு போலீசார் பரபரப்பு தகவலை தெரிவித்தனர். 2 பேர் கொலை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story