பாளையங்கோட்டையில் கடையில் நூதன முறையில் டி.வி. அபேஸ் - டிப்-டாப் வாலிபருக்கு வலைவீச்சு


பாளையங்கோட்டையில் கடையில் நூதன முறையில் டி.வி. அபேஸ் - டிப்-டாப் வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Oct 2020 10:15 PM GMT (Updated: 18 Oct 2020 12:03 AM GMT)

பாளையங்கோட்டையில் கடையில் நூதன முறையில் டி.வி.யை அபேஸ் செய்த டிப்-டாப் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைக்கு நேற்று டிப்-டாப் உடை அணிந்த வாலிபர் வந்தார். அவர் டி.வி. மற்றும் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை வாங்குவதாக கூறினார். அப்போது அவர் பணம் கொண்டு வரவில்லை என்றும், தனது வீட்டு முகவரிக்கு டி.வி., வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை கொண்டு வந்தால், அங்கு பணத்தை தருவதாக கூறினார்.

இதனை உண்மை என்று நம்பிய கடை ஊழியர்கள், டி.வி., வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை கடை ஊழியரிடம் கொடுத்து அந்த வாலிபருடன் அனுப்பினர். இதையடுத்து அவர்கள் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி வழியாக சென்றபோது, அங்குள்ள கடையை காண்பித்த அந்த வாலிபர், அந்த கடை தனக்கு சொந்தமானது என்றும், அங்கு டி.வி.யை பொருத்த வேண்டும் என்று கூறி டி.வி.யை பெற்று சென்றார். மேலும் அவர், கடை ஊழியரிடம் வீட்டு முகவரிக்கு வாட்டர் ஹீட்டரை கொண்டு செல்லுங்கள், அங்கு தான் விரைவில் வந்து விடுவதாகவும் கூறினார்.

இதனை உண்மை என்று நம்பிய கடை ஊழியர் வாட்டர் ஹீட்டருடன் அந்த வாலிபர் கூறிய முகவரிக்கு சென்றார். அப்போது அது போலியான முகவரி என்பது தெரிய வந்தது. உடனே அந்த வாலிபரின் செல்போனுக்கு கடை ஊழியர் தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் நூதன முறையில் வாலிபர் கடையில் டி.வி.யை அபேஸ் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து கடை மேலாளர் ஆன்ட்ரூ ஆபிரகாம் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் டி.வி.யை அபேஸ் செய்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story