தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாநில போலீஸ் பாதுகாப்பு பிரிவு சூப்பிரண்டு ஆய்வு


தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாநில போலீஸ் பாதுகாப்பு பிரிவு சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 17 Oct 2020 10:15 PM GMT (Updated: 18 Oct 2020 12:19 AM GMT)

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாநில போலீஸ் பாதுகாப்பு பிரிவு சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

தென்காசி,

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் பெரிய முக்கிய கோவில்களை ஆண்டுதோறும் தமிழக போலீஸ் பாதுகாப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருவது வழக்கம். அதன்படி தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலிலும் பாதுகாப்பு பிரிவு போலீசார் நேற்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது இந்த முறை பாதுகாப்பு பிரிவு சூப்பிரண்டு சுரேஷ்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அவர் கோவிலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பாதுகாப்பு எந்த வகையில் உள்ளது? என்ன தேவை? என்பது குறித்து பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கோவில் வளாகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் நகராட்சி, தீயணைப்பு துறை, மின்வாரியம், உணவு கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறியதாவது:

காவல்துறையினர் கோவில் வாசலில் மிகவும் விழிப்புடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். கோவிலின் சுற்றுப்புறங்களிலும் கண்காணிப்பு இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்று நகராட்சி அலுவலர்கள் பார்வையிட வேண்டும். உணவு கட்டுப்பாட்டு துறையினர் கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்கள் காலாவதியான தேதியில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீயணைப்பு துறையினர் தீவிபத்து ஏதாவது ஏற்படும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு ஆய்வு செய்ததில் ஏதாவது கோவிலுக்கு சொல்லப்பட்டதா? அவ்வாறு கூறியிருந்தால் அது நிறைவேற்றப்பட்டதா? என்பதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் வாரியத்தினர் கோவில் பகுதியில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் மின் இணைப்புகள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பிறகு கோவிலை விட்டு வெளியே வந்த அவரை, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் சந்தித்து பேசினார்.

Next Story