சென்னை திரு.வி.க. நகரில் பரிதாபம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை கத்தியால் கையை அறுத்து பிளம்பர் தற்கொலை முயற்சி


சென்னை திரு.வி.க. நகரில் பரிதாபம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை கத்தியால் கையை அறுத்து பிளம்பர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 18 Oct 2020 6:45 AM GMT (Updated: 18 Oct 2020 2:00 AM GMT)

சென்னை திரு.வி.க. நகரில் ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பிளம்பர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

திரு.வி.க. நகர்,

சென்னை திரு.வி.க. நகரை அடுத்த வெற்றிநகர் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் பழனி(வயது 46). பிளம்பர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பவானி(40). இவர்களுக்கு தேவதர்ஷினி(17) என்ற மகளும், பிரகதீஷ்(11) என்ற மகனும் இருந்தனர்.

இவர்களில் தேவதர்ஷினி, கல்லூரியில் முதலாமாண்டும், பிரகதீஷ் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

சொந்த வீட்டில் முதல் மாடியில் பழனி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வீட்டின் கீழ்தளத்தில் அவரது தந்தை சண்முகம்(75) வசித்து வருகிறார்.

நேற்று மதியம் வரை பழனி யாரும் கீழே இறங்கி வராததால் சந்தேகம் அடைந்த சண்முகம், முதல் மாடியில் உள்ள தனது மகன் பழனி வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் வாசலில் வளர்ப்பு நாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம், கதவை திறந்து வீட்டுக்குள் சென்றார்.

படுக்கையில் மருமகள் பவானி மற்றும் பேரன், பேத்தி என 3 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். பழனியை காணவில்லை.

சந்தேகத்தின்பேரில் 2-வது மாடியிலிருந்த பழனியின் அலுவலகத்துக்கு சென்று பார்த்தார். அங்கு பழனி, கத்தியால் கையை அறுத்து ரத்தம் வடிந்த நிலையில் கவலைக்கிடமாக கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணாநகர் துணை கமிஷனர் ஜவகர், உதவி கமிஷனர் சுரேந்தர், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பழனிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் ரூ.12 லட்சம் வரை கடன் இருந்ததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

எனவே பழனி தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக அனைவரும் விஷம் குடித்து உள்ளனர். வீட்டில் வளர்த்த நாய்க்கும் விஷம் கொடுத்து உள்ளனர். ஆனால் இதில் பழனியின் மனைவி, மகள், மகன் மற்றும் வளர்ப்பு நாய் இறந்து விட பழனி மட்டும் உயிர் பிழைத்து உள்ளார்.

பின்னர் அவர் மாடிக்கு சென்று கையை அறுத்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

ஆனால் இறந்து கிடந்த பவானி, தேவதர்சினி, பிரகதீஷ் 3 பேரும் விஷம் குடித்து இருந்தால் வாயில் நுரை தள்ளி இருக்க வேண்டும். ஆனால் அதுபோல் எதுவும் இல்லை. எனவே பழனியே மனைவி, மகன், மகள் ஆகியோரை கொலை செய்துவிட்டு, தானும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றாரா? என்பது தெரியவில்லை.

குடும்பத்தினர் இறந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பழனியிடம் விசாரித்தால் மட்டுமே இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story