நெய்வேலி அருகே ஆடு விற்றதை கண்டித்த தந்தை அடித்துக்கொலை வாலிபர் கைது


நெய்வேலி அருகே ஆடு விற்றதை கண்டித்த தந்தை அடித்துக்கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2020 4:24 AM GMT (Updated: 18 Oct 2020 4:24 AM GMT)

நெய்வேலி அருகே ஆடு விற்றதை கண்டித்த தந்தையை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள செடுத்தான்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 45). கூலி தொழிலாளியான இவர், தனது வீட்டில் ஆடுகளைவளர்த்து வந்தார். இவருடைய மகன் சசிக்குமார்(20). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறை காரணமாக அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சசிக்குமார், தனது செலவுக்காக சேகரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஆட்டை யாருக்கும் தெரியாமல், சசிக்குமார் விற்று விட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சேகர், சசிக்குமாரிடம் சென்று ஆட்டை ஏன் விற்றாய் என கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சசிக்குமார், தனது தந்தை என்றும் பாராமல் சேகரை காலால் எட்டி உதைத்துள்ளார். மேலும் அவரை, கையாலும், கால்களாலும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சேகரின் மனைவி சக்தி, நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சசிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story