வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிய விரிவாக்க மையம் - பூமி பூஜையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிய விரிவாக்க மையம் - பூமி பூஜையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Oct 2020 9:15 AM GMT (Updated: 18 Oct 2020 9:09 AM GMT)

சிவகங்கையில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள வேளாண்மை விரிவாக்க மைய பூமிபூஜையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சிவகங்கை நகா் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அமைச்சா் பாஸ்கரன் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் இளங்கோ, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வெங்கடேசன், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் தனபால், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜா, இந்துசமய அறநிலையக்குழுத் தலைவர் சந்திரன், கூட்டுறவு அச்சக தலைவா் சசிக்குமார் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாண உதவி தொகை வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட சிவகங்கை வட்டத்தை சேர்ந்த 29 பயனாளிகளுக்கும், காளையார்கோவில் வட்டத்தை சேர்ந்த 4 பயனாளிகளுக்கும், இளையான்குடி வட்டத்தை சோ்ந்த 8 பயனாளிகளுக்கும், திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த 12 பயனாளிகளுக்கும், மானாமதுரை வட்டத்தை சேர்ந்த 33 பயனாளிகளுக்கும் ரூ.67 லட்சத்து 80 ஆயிரத்திற்கான நிவாரண உதவியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கி பேசினார். முடிவில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியாரின் நேர்முக உதவியாளர் ராஜா நன்றி கூறினார்.

Next Story