கொடுமுடி, பெருந்துறை, அந்தியூர் பகுதியில் டாக்டர், அரசு ஊழியர் உள்பட 5 பேருக்கு கொரோனா


கொடுமுடி, பெருந்துறை, அந்தியூர் பகுதியில் டாக்டர், அரசு ஊழியர் உள்பட 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Oct 2020 9:45 AM GMT (Updated: 18 Oct 2020 9:38 AM GMT)

கொடுமுடி, பெருந்துறை, அந்தியூர் பகுதியில் டாக்டர், அரசு ஊழியர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஈரோடு,

கொடுமுடியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று சென்னசமுத்திரம் அருகே உள்ள பெரிய வட்டத்தைச் சேர்ந்த 70 வயது ஆண் ஒருவருக்கும், கொடுமுடி நத்தம் மேடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவருக்கும், வெங்கம்பூர் பேரூராட்சி எல்லையூரைச் ஊரைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேரும் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறையினரும், பேரூராட்சி ஊழியர்களும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அப்பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் அளிக்கப்பட்டன. இதில் எல்லையூரைச் சேர்ந்த முதியவர் மட்டும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். மற்ற 2 பேரும் ஈரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் செயல்பட்டு வரும் கொரோனா மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இதேபோல் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நேற்று முதல் மூடப்பட்டது. அலுவலர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய கால்நடை டாக்டருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Next Story