மசினகுடியில், வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை


மசினகுடியில், வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 18 Oct 2020 4:30 PM GMT (Updated: 18 Oct 2020 4:22 PM GMT)

மசினகுடியில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்,

கோவை பீளமேடு 9-வது தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜ். இவரது மகன் விஜயகுமார்(வயது 33). நீலகிரி மாவட்டம் மசினகுடியில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் விஜயகுமார் நேற்று முன்தினம் வழக்கம்போல் வங்கியில் பணியாற்றினார். பின்னர் இரவு 7.30 மணியளவில் வங்கியை பூட்டிவிட்டு விஜயகுமார் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு வங்கிக்கு ஊழியர்கள் பணிக்கு வந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மேலாளர் விஜயகுமார் வங்கிக்கு வரவில்லை. இதனால் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு ஊழியர் ஒருவர் சென்றார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

உடனே அவருடன், அக்கம்பக்கத்தினரும் வந்து சத்தம் எழுப்பினர். இருப்பினும் விஜயகுமார் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவு இடைவெளி வழியாக உள்ளே எட்டி பார்த்தனர். அப்போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் விஜயகுமார் காணப்பட்டார். இதுகுறித்து மசினகுடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மசினகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story