தாளவாடி அருகே தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் விவசாயிகள் பீதி


தாளவாடி அருகே தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் விவசாயிகள் பீதி
x
தினத்தந்தி 18 Oct 2020 7:39 PM GMT (Updated: 18 Oct 2020 7:39 PM GMT)

தாளவாடி அருகே தோட்டத்தில் நடமாடிய சிறுத்தையால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மான், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்பட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்தும் மற்றும் ஊருக்குள் புகுந்து வீடு முன்பு கட்டப்பட்டிருக்கும் ஆடு, மாடுகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் காவலுக்காக தோட்டத்தில் விடப்பட்டிருக்கும் நாயையும் விட்டுவைப்பதில்லை.

தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட சூசைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. விவசாயி. இவர் தனது வீடு முன்பு ஆடு, மாடுகள் கட்டி வளர்த்து வருகிறார். ஜெயந்தி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தற்செயலாக வீட்டுக்கு வெளியே வந்து நின்றார். அப்போது தோட்டத்தில் ஏதோ ஒரு உருவம் தென்பட்டதை பார்த்தார். இதனால் டார்ச் லைட் அடித்தபோது அது சிறுத்தை போன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் சத்தம் போட்டார்.

விவசாயிகள் பீதி

சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த அவருடைய குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இதற்கிடையே சத்தம் கேட்டதும் சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டது. உடனே தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று தோட்டத்தில் பதிவான கால்தடத்தை பார்த்து அது சிறுத்தை தான் என்பதை உறுதி செய்தனர். அதேபோல் நேற்று காலை முத்துசாமி என்பவரது தோட்டத்திலும் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்தது. ஜெயந்தியின் தோட்டத்தில் இருந்து சென்ற சிறுத்தை முத்துசாமி தோட்டம் வழியாக புகுந்து காட்டுக்குள் சென்றது தெரியவந்தது. சிறுத்தை நடமாட்டத்தால் அந்த பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘சூசைபுரம், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிறுத்தை நடமாடுவதை விவசாயிகள் நேரில் பார்த்துள்ளனர். தொடர்ந்து சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது. மேலும் வனத்துறையினர் சூசைபுரம் பகுதியில் பொருத்தியிருந்த கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது. ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது’ என்றனர்.

Next Story