குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 19 Oct 2020 11:45 PM GMT (Updated: 19 Oct 2020 11:45 PM GMT)

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்குவார். தற்போது கொரோனா தொற்று காரணமாக இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறாமல் அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நட்சத்திர வெற்றி, புறநகர் மாவட்ட செயலாளர் செங்குளம் கணேசன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லையில் பாதாளச்சாக்கடை, கூட்டு குடிநீர் திட்ட பணிகளால் சேதமடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பணிகளை வேகப்படுத்தி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறந்து விட வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சாலை மறியல்

நாடார் மக்கள் பேரவையினர் தலைவர் கராத்தே ஏ.பி.ராஜா நாடார், நெல்லை மாவட்ட செயலாளர்கள் கணேசன், ஜோ ஆகியோர் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் நாடார் இறப்பில் மர்மம் உள்ளது. இறப்பிற்கு சம்பந்தமானவர்கள் பெயர் போலீஸ் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவில்லை. அவர்கள் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) மார்க்கெட் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளனர்.

அம்பை வட்டார டிப்பர் லாரி சங்கத்தினர் தலைவர் பலவேசம், செயலாளர் கிருபாகரன், பொருளாளர் செய்யது அலி ஆகியோர் தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் அம்பை வட்டாரத்தில் டிப்பர் லாரி வைத்து, அரசு அனுமதி பெற்ற பாஸ் வாங்கி மணல், ஜல்லி போன்றவற்றை வாடகைக்கு அடித்து வருகிறோம். கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வந்த எம்சாண்ட் குவாரியில் அவர்கள் அரசுரிமை பெற்ற பாஸ் வழங்கியதால் தான் பணம் கொடுத்து வாடகைக்கு எம்சாண்ட் அடித்து வந்தோம். ஆனால் தற்போது அந்த குவாரி அரசு விதிமுறைப்படி நடைபெறவில்லை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் அந்த குவாரியில் எம்சாண்ட் ஏற்றி சென்ற எங்கள் வாகனங்களையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். நாங்கள் அரசு முத்திரையுடன் பாஸ் வழங்கியதால் தான் வாடகைக்கு அடித்து வந்தோம். எங்கள் டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்வதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். எங்கள் மீது பொய் வழக்கு போட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

நடமாடும் கழிப்பறை

தமிழக வாழ்வுரிமை கட்சி நெல்லை மாவட்ட இளைஞர் அணி தலைவர் நவ்சாத் கொடுத்துள்ள மனுவில், மேலப்பாளையம் பகுதியில் இருந்து நாகர்கோவில் செல்லும் புறவழிச்சாலையில் உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் வந்து தங்கள் ஊரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகில், ரெயில் நிலையம் அருகில் நடமாடும் கழிப்பறை வசதி செய்தி தரவேண்டுமென்று சமூக ஆர்வலர் சங்கத்தினர் மனு கொடுத்தனர். பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் பஞ்சாயத்து மேலக்குளம் கிராமத்தில் தேவாலய விரிவாக்க பணிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று அந்த ஊர் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

வாதிரியான்

வாதிரியான் சமுதாய மக்கள் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் நெசவு தொழில் மற்றும் நூல் வணிகம் செய்து வருகிறோம். இப்போது நெசவு தொழில் நலிவடைந்ததால் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குடும்பன், பன்னாடி, கடையன், பள்ளன், காலாடி வாதிரியான் ஆகிய சமுதாயங்களையும் ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை அறிவிக்கவேண்டும் என்றும், அவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி மனு கொடுத்து வருகிறார்கள். எங்கள் வாதிரியான் சமுதாயத்திற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே எங்களை தேவேந்திரகுல வேளாளர் என தனியாக அறிவிக்காமல் தொடர்ந்து வாதிரியான் பட்டியலில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story