பெங்களூரு கோர்ட்டு வளாகத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் சிறப்பு கோர்ட்டு நீதிபதிக்கு வெடிகுண்டு மிரட்டல் 2 பேர் கைது


பெங்களூரு கோர்ட்டு வளாகத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் சிறப்பு கோர்ட்டு நீதிபதிக்கு வெடிகுண்டு மிரட்டல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2020 9:51 PM GMT (Updated: 20 Oct 2020 9:51 PM GMT)

பெங்களூரு கோர்ட்டு வளாகத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் சிறப்பு கோர்ட்டு நீதிபதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை மற்றும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பான வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோர்ட்டுக்குள் ஒரு மர்மபொருள் கிடந்தது. அதன் அருகே ஒரு கடிதமும் கிடந்தது. அந்த மர்மபொருளில் வயர்களும் இணைக்கப்பட்டு இருந்தன.

இதனால் கோர்ட்டில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் அல்சூர்கேட் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் அங்கு வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அந்த மர்மபொருளை கைப்பற்றி வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அது வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து மர்மபொருள், கடிதத்தை வீசி சென்ற மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை செய்வோம்

இந்த நிலையில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட கடிதம், பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டு நீதிபதி சீனப்பாவின் பெயருக்கு வந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில், ‘போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும், பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறையில் கைதானவர்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும், கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு கைதாகும் நபர்களுக்கும் உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும்.

உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றால் கேள். நாங்கள் தருகிறோம். ஆனால் ஜாமீன் வழங்க மறுத்தால் உனது காரில் வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம். இந்த கடிதத்தை பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த், மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் ஆகியோருக்கும் எழுதி அனுப்பி உள்ளோம். முகமது ஜெய்ஷ் அமைப்பு பாகிஸ்தான்’ என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் போதைப்பொருள் வழக்கு, வன்முறை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க இந்த கடிதம் எழுதப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர்.

2 பேர் கைது

இதற்கிடையே பெங்களூருவில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு சென்று அந்த கடிதம் வந்த முகவரி குறித்தும் போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த கடிதம் துமகூரு மாவட்டம் சேலூரில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சேலூருக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த கடிதத்தை திப்தூரை சேர்ந்த ராஜசேகர், குப்பி தாலுகா ஹகலவாடியை சேர்ந்த வேதாந்த் ஆகியோர் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அல்சூர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குப்பி அருகே குரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த பசவலிங்கய்யா என்பவரின் மகளான பூமிகா என்பவரை ராஜசேகர் திருமணம் செய்து உள்ளார். அதுபோல பசவலிங்கய்யாவின் இன்னொரு மகளான கல்பனா என்பவரை ரமேஷ் என்பவர் திருமணம் செய்து உள்ளார். ரமேஷ் சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். ஆனால் ராஜசேகர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பூமிகாவை திருமணம் செய்து கொண்டால் தனக்கு அதிகளவில் சொத்து கிடைக்கும் என்று ராஜசேகர் நினைத்து இருந்தார்.

போலீசில் புகார்

இந்த நிலையில் கடந்த ஆண்டு (2019) பசவலிங்கய்யாவிடம் உங்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று ராஜசேகர் கேட்டு உள்ளார். ஆனால் பசவலிங்கய்யா நிலத்தை கொடுக்க மறுத்து விட்டார். அதே நேரத்தில் அந்த நிலத்தை கைப்பற்ற ரமேஷ் முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த ராஜசேகர், ரமேசிடம் கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை தனது பெயருக்கு வாங்கி தரும்படி பூமிகாவிடம், ராஜசேகர் தகராறு செய்து வந்து உள்ளார். மேலும் பூமிகாவை, ராஜசேகர் அடித்து, உதைத்து வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து ராஜசேகர் மீது சேலூர் போலீசில் பூமிகா புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் ராஜசேகரை பிடித்து விசாரித்து அவரை எச்சரித்து அனுப்பினர்.

வெடிகுண்டு மிரட்டல்

இந்த நிலையில் மாமனாரின் 4 ஏக்கர் நிலத்தை பெற இடையூறாக இருக்கும் ரமேசை, எப்படியாவது போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்று ராஜசேகர் திட்டம் தீட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது உறவினரான வேதாந்திடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து வேதாந்த், ரமேஷ் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கு ராஜசேகரும் ஒப்புக்கொண்டு உள்ளார்.

தற்போது போதைப்பொருள், வன்முறை வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருவதால் அதை விசாரிக்கும் நீதிபதிக்கு ரமேஷ் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்க ராஜசேகரும், வேதாந்தும் முடிவு செய்து உள்ளனர். அதன்படி நீதிபதி சீனப்பாவுக்கு ரமேஷ் பெயரில் மிரட்டல் கடிதம் எழுதியதுடன், அந்த கடிதத்துடன் வெடிபொருட்களை இணைத்து வைத்து பார்சல் மூலம் சேலூரில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து நீதிபதி சீனப்பா பெயருக்கு பெங்களூருவுக்கு அனுப்பியதும் தெரியவந்து உள்ளது. ரமேஷ் பெயரில் கடிதம் எழுதி அனுப்பினால் அவரை போலீசார் கைது செய்து விடுவார்கள். சொத்தை அபகரித்து விடலாம் என்று ராஜசேகர் திட்டம் தீட்டியதும் அம்பலமாகி உள்ளது. பெங்களூரு கோர்ட்டு வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் ரமேசிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் மூலம் இவர்கள் 2 பேரும் சிக்கியிருந்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டு உள்ளார். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையொட்டி நேற்று பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு முழுவதும் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

மேலும் கோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. நீதிபதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story