வட கர்நாடகத்தில் மழை வெள்ள சேதம் ஹெலிகாப்டரில் சென்று எடியூரப்பா இன்று பார்வையிடுகிறார்


வட கர்நாடகத்தில் மழை வெள்ள சேதம் ஹெலிகாப்டரில் சென்று எடியூரப்பா இன்று பார்வையிடுகிறார்
x
தினத்தந்தி 20 Oct 2020 9:54 PM GMT (Updated: 20 Oct 2020 9:54 PM GMT)

வட கர்நாடகத்தில் மழை வெள்ள சேதங்களை முதல்-மந்திரி எடியூரப்பா ஹெலிகாப்டரில் பறந்து சென்று இன்று(புதன்கிழமை) பார்வையிடுகிறார். அதோடு நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்துகிறார்.

பெங்களூரு,

வட கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பெலகாவி, பாகல்கோட்டை, பீதர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூரில் பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. பல பகுதிகளில் தரை பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு தொடர்பு சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தண்ணீர் சூழ்ந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நிவாரண முகாம்களில் 28 ஆயிரம் பேர் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு போதுமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அரசுக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர். துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் சுற்றுப்பயணம் ஆய்வு செய்தனர். ஆயினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

ஹெலிகாப்டரில் சென்று...

மேலும் வட கர்நாடகத்தில் வெள்ளத்தால் சேதங்கள் பெரிய அளவில் ஏற்பட்டு இருந்தாலும், முதல்-மந்திரி எடியூரப்பா அங்கு சென்று சேதங்களை ஆய்வு செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன. இந்த நிலையில் சிவமொக்காவில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பெங்களூரு திரும்பியுள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, இன்று(புதன்கிழமை) வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இதற்காக அவர் இன்று காலை 9.15 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கலபுரகிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று கலபுரகி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை வானில் பறந்தபடி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கு மாவட்ட அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தி நிவாரண பணிகளை முடுக்கிவிடுகிறார்.

தனி விமானம்

அதன் பிறகு அவர் மதியம் 2.50 மணிக்கு விஜயாப்புரா மாவட்டத்திற்கு சென்று, அங்கும் ஹெலிகாப்டர் மூலம் பாதிப்புகளை பார்வையிடுகிறார். அந்த ஆய்வை முடித்துக் கொண்டு அரசு அதிகாரிகளுடன் நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அவர் தனி விமானம் மூலம் பெங்களூரு திரும்புகிறார். எடியூரப்பா வருகையையொட்டி கலபுரகி, விஜயாப்புரா மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story