விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட மானியம் நாராயணசாமி ஒப்புதல்


விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட மானியம் நாராயணசாமி ஒப்புதல்
x
தினத்தந்தி 20 Oct 2020 10:11 PM GMT (Updated: 20 Oct 2020 10:11 PM GMT)

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடுவதற்கான மானியத் தொகைக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபின் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான தொகையை வேளாண்துறையானது மின்துறைக்கு செலுத்தி விடும்.

இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் மேலாண்மையை பெருக்கவும், விவசாயிகளின் நலன் காக்கவும், அவர்களின் வருமானத்தை பெருக்கவும், அரசு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம் என்கிற திட்டத்தின் மூலமாக இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.

மானியத்தொகை

கடந்த 2017-18ம் ஆண்டு காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 623 விவசாயிகளின் மின் மோட்டார் களுக்கான 3-வது மற்றும் 4-வது காலாண்டுகளுக்கு மானியத்தொகையான ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 37 மற்றும் 2018-19 ஆண்டு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 139 விவசாயிகளின் மின் மோட்டார்களுக்கான 4 காலாண்டுகளுக்கான மானியத்தொகை ரூ.3 கோடியே 46 லட்சத்து 62 ஆயிரத்து 366 என மொத்தம் ரூ.3.53 கோடியினை வேளாண்துறை மூலமாக மின்துறைக்கு வழங்குவதற்கான செலவின ஒப்புதலை முதல்-அமைச்சர் நாராயணசாமி அளித்துள்ளார்.

இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 762 விவசாயிகளின் நலன் அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story