சேலத்தில் பயங்கரம்: பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை மனைவியை தவறாக பேசியதால் - நிலபுரோக்கர் ஆத்திரம்


சேலத்தில் பயங்கரம்: பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை மனைவியை தவறாக பேசியதால் - நிலபுரோக்கர் ஆத்திரம்
x
தினத்தந்தி 21 Oct 2020 12:51 PM GMT (Updated: 21 Oct 2020 12:51 PM GMT)

சேலத்தில் மனைவியை தவறாக பேசியதால் பெயிண்டரை கழுத்தை அறுத்து கொலை செய்த நிலபுரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் பள்ளப்பட்டி அருகே உள்ள கோரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 60). பெயிண்டர். இவரும் அதே பகுதியை சேர்ந்த நில புரோக்கரான குண்டு மாரியப்பன் (55) என்பவரும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி, 2 பேரும் அன்னதானப்பட்டி லாரி மார்க்கெட் பகுதியில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த குண்டு மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜீவா நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து குண்டு மாரியப்பனை நேற்று கைது செய்தனர். அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சம்பவத்தன்று 2 பேரும் மது அருந்தி கொண்டு இருந்தோம். அப்போது எனது மனைவியை ஜீவா தவறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவாவின் கழுத்தை அறுத்தேன் என்று கூறியுள்ளார்.

Next Story