திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி மேலும் 125 பேருக்கு தொற்று


திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி மேலும் 125 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 21 Oct 2020 3:37 PM GMT (Updated: 21 Oct 2020 3:37 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியானார்கள். நேற்று 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது.

179 பேர் நேற்று சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 ஆயிரத்து 178 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,087 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். திருப்பூரை சேர்ந்த 50 வயது ஆண் கடந்த 14-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபோல் 87 வயது பெண் கடந்த 11-ந் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை அவர் இறந்தார்.

77 வயது ஆண் 14-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் அதிகாலை அவர் இறந்தார். இதுபோல் 72 வயது பெண் கடந்த 14-ந் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபோல் 83 வயது ஆண் கடந்த 13-ந் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் காலை இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது. இதில் 36 பெண்கள் அடங்குவார்கள்.

Next Story