தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் கலெக்டர் ஆய்வு


தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2020 3:54 AM GMT (Updated: 22 Oct 2020 3:54 AM GMT)

தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தி மற்றும் 58-வது குருபூஜை விழா வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. விழாவில் 28-ந் தேதி தேவரின் ஆன்மிக விழாவும் 29-ந் தேதி அரசியல் விழா, 30-ந் தேதி குருபூஜை விழா நடைபெறுகிறது. 30-ந் தேதி காலை 9 மணிக்கு அரசு சார்பில் விழா நடைபெறுகிறது. குருபூஜை விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட தமிழக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். அதனைத்தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., கம்யூனிஸ்டு, பா.ம.க. அனைத்துக் கட்சி பிரமுகர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

விழாவையொட்டி பால்குடம், பொங்கல், முளைப்பாரி மற்றும் ஜோதி ஓட்டம் நடக்கும். பொதுமக்கள் திரளாக அஞ்சலி செலுத்துவார்கள். தற்போது கொரோனா காரணமாக மாவட்ட நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளை விதித்து சமூக இடைவெளியை கடைபிடிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பசும்பொன் வருகை தந்து திடீர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.பசும்பொன் நினைவிடம், புகைப்பட கண்காட்சி வளாகம், பொதுமக்கள் செல்லும்வழி, முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும்வழி, தியான மண்டபம், கழிப்பறை, குடிநீர் வசதி, வாகனம் நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார்.

பசும்பொன் வருகைதந்த கலெக்டர் வீரராகவராவை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, பழனி, தங்கவேல், அழகுராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

Next Story