ஓசூரில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி 2 பேர் பலி


ஓசூரில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 22 Oct 2020 5:15 PM GMT (Updated: 22 Oct 2020 3:21 PM GMT)

ஓசூரில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி நண்பர்கள் 2 பேர் பலியாகினர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 21). ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சத்தியமூர்த்தி (24). இவர் சில்லி சிக்கன் கடை நடத்தி வந்தார். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஓசூரில் இருந்து சேலம் நோக்கி சென்றனர்.

அப்போது, ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்று விட்டது. இந்த விபத்தில் ராஜேசும், சத்தியமூர்த்தியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story