மைசூரு தசரா விழாவையொட்டி ஜம்புசவாரி ஊர்வல ஒத்திகை


மைசூரு தசரா விழாவையொட்டி ஜம்புசவாரி ஊர்வல ஒத்திகை
x
தினத்தந்தி 22 Oct 2020 10:46 PM GMT (Updated: 22 Oct 2020 10:46 PM GMT)

மைசூரு தசரா விழாவையொட்டி ஜம்புசவாரி ஊர்வல ஒத்திகை நேற்று நடந்தது. அப்போது யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு குதிரைகள் மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரு, 

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் இறுதிநாளில் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். இதில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து செல்லும், அதன் பின்னர் கஜபடை நடைபோடும். அதன் தொடர்ச்சியாக குதிரைப்படை, போலீசார், பேண்டு வாத்தியக் குழுவினர், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து செல்லும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதை கண்டு ரசிக்க 5 லட்சம் பேர் மைசூருவில் குவிவார்கள்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் இருப்பதால் மைசூரு தசரா விழா எளிமையாக நடத்தப்படுகிறது. அதாவது பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனை வளாகத்திலேயே எளிமையாக நடக்க உள்ளது. எப்போதும் மைசூரு அரண்மனையில் இருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பன்னிமண்டபம் வரை நடைபெறும். ஆனால் இந்த முறை அரண்மனை வளாகத்திலேயே நடக்க உள்ளது.

ஒத்திகை நடந்தது

இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்துள்ள அபிமன்யு, விக்ரம், கோபி, விஜயா, காவேரி ஆகிய 5 யானைகளுக்கும், குதிரைகளுக்கும் ஏற்கனவே நடை பயிற்சி, வெடிசத்தம் கேட்டு மிரளாமல் இருக்க பீரங்கி குண்டுகளை வெடித்து பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் ஜம்புசவாரி ஊர்வலம் தொடங்க இன்னும் 3 நாட்களே இருப்பதால், நேற்று அரண்மனை வளாகத்தில் ஜம்பு சவாரி ஊர்வலம் ஒத்திகை நடந்தது. இதில் 5 யானைகளும், குதிரைகளும் கலந்துகொண்டன. இந்த ஒத்திகையின் போது 5 யானைகளும் அணிவகுத்து வந்தன. அப்போது தங்க அம்பாரியை சுமக்க உள்ள அபிமன்யு விழா மேடை அருகில் வந்து நின்று வணக்கம் செலுத்தும். அதுபோல் ஒத்திகையின் போது அபிமன்யு தும்பிக்கையை தூக்கி வணக்கம் செலுத்தியது.

மிரண்ட குதிரைகள்

மேலும் பேண்டு வாத்தியக் குழுவினரின் பேண்டு வாத்தியமும் இசைக்கப்பட்டது. அந்த சமயத்தில் யானைகள் பிளிறின. இந்த சத்தம் கேட்டு ஒத்திகையில் ஈடுபட்ட குதிரைகள் மிரண்டு ஓடின. இதில் சில குதிரைகளில் இருந்த போலீசார் கீழே தவறி விழுந்தனர். இதில் சில போலீசாருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.

இதனால் ஒத்திகை நிகழ்ச்சியில் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் மிரண்ட குதிரைகளை ஆசுவாசப்படுத்தி மீண்டும் ஒத்திகையில் ஈடுபடுத்தினர்.

ஜம்புசவாரி ஊர்வலம் நடக்க 3 நாட்கள் மட்டுமே இருப்பதால், அடுத்த 3 நாட்களும் யானை, குதிரைகளுக்கு ஒத்திகை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story