தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு கால்வாய் 4-வது கட்ட பணி


தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு கால்வாய் 4-வது கட்ட பணி
x
தினத்தந்தி 22 Oct 2020 11:51 PM GMT (Updated: 22 Oct 2020 11:51 PM GMT)

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு கால்வாய் திட்டத்தின் 4-வது கட்ட பணியை இன்பதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக வெள்ளாங்குளி கன்னடியன் கால்வாயில் இருந்து பச்சையாறு வரையிலும், 2-வது கட்டமாக பச்சையாற்றில் இருந்து மூலைக்கரைப்பட்டி வரையிலும், 3-வது கட்டமாக மூலைக்கரைப்பட்டியில் இருந்து காடன்குளம் வரையிலும் கால்வாய் தோண்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து 4-வது கட்டமாக நம்பியாற்றில் இருந்து எம்.எல்.தேரி வரையிலும் கால்வாய் தோண்டுவதற்கு அரசு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 4-வது கட்ட கால்வாய் தோண்டும் பணி தொடக்க விழா, திசையன்விளை அருகே ஆயன்குளம் பகுதியில் நேற்று நடைபெற்றது. ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை தலைமை தாங்கி, 4-வது கட்ட கால்வாய் தோண்டும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ரூ.160 கோடி ஒதுக்கீடு

தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை பயன்படுத்தும் வகையில் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இதுவரை ரூ.631 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்துக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். தற்போது 4-வது கட்ட பணிக்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மார்ச் மாதத்தில்...

இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 23 ஆயிரம் எக்டர் நிலம் பாசன வசதி பெறும். இந்த பணிகள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். ராதாபுரம் தொகுதிக்கு தாமிரபரணி தண்ணீர் விரைவில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமல்ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.பி.கே.செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் துரைசாமி, இலக்கிய அணி பொருளாளர் ரமேஷ், திசையன்விளை ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.பி.ஜெயக்குமார், அரசு வக்கீல் பழனி சங்கர், கூடங்குளம் லிங்கத்துரை, எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டி, தட்சணமாற நாடார் சங்க முன்னாள் தலைவர் சபாபதி நாடார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர், செயற்பொறியாளர்கள் ரமேஷ், சிவக்குமார் உள்பட அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story