பழனி அருகே கோர விபத்து: மரத்தில் கார் மோதல்; தம்பதி உள்பட 4 பேர் பலி- மாப்பிள்ளை பார்க்க சென்ற போது பரிதாபம்


பழனி அருகே கோர விபத்து: மரத்தில் கார் மோதல்; தம்பதி உள்பட 4 பேர் பலி- மாப்பிள்ளை பார்க்க சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 22 Oct 2020 10:15 PM GMT (Updated: 23 Oct 2020 1:18 AM GMT)

பழனி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் பலியாகினர். மாப்பிள்ளை பார்க்க சென்றபோது பரிதாப சம்பவம் அரங்கேறியது.

நெய்க்காரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன் (வயது 71). விவசாயி. இவர் நேற்று தனது பேத்திக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக செம்மடைப்பட்டியில் இருந்து பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்கு ஒரு காரில் சென்றார். அவருடன் மனைவி முத்தம்மாள் (64), உறவினர்கள் நடராஜ் (49), மகாலட்சுமி (50), மணிவேல் (30) ஆகியோர் சென்றனர். காரை மணிவேல் ஓட்டினார்.

நெய்க்காரப்பட்டியை அடுத்த கரடிக்கூட்டம் பகுதியில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய கருப்பணன், முத்தம்மாள், நடராஜ், மணிவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மகாலட்சுமி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வீரகாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த கருப்பணன் உள்ளிட்ட 4 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். இது குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story