ஆயுதபூஜையையொட்டி கரூரில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம்


ஆயுதபூஜையையொட்டி கரூரில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Oct 2020 10:15 PM GMT (Updated: 23 Oct 2020 3:24 AM GMT)

கரூரில் ஆயுதபூஜையையொட்டி பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஒரு பக்கா பொரி ரூ.15-க்கு விற்பனையாகிறது.

கரூர்,

நாம் கற்ற கல்வியும், செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில் கல்வியில் மேன்மை பெறவும், தொழிலுக்கு மரியாதை செலுத்தி இனியும் சிறப்பாக நடக்க கடவுளின் அருளை பெறும் விதமாகவும் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையில் முக்கிய அம்சமாக ஆயுதபூஜை விழாவினை கொண்டாடுகிறோம். அன்றைய தினம் தொழில் நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள் உள்ளிடவற்றில் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் எந்திரம் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்து பூஜை நடத்துவர். வீடுகளில் தங்களது குழந்தைகளின் புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவற்றை வைத்து சரஸ்வதி கடவுளை வழிபடுவர். இத்தகைய வழிபாட்டு நிகழ்ச்சியின் போது பொரி, அவல், நிலக்கடலை, பழ வகைகள், சர்க்கரை பொங்கலை கடவுளுக்கு படைப்பது உண்டு. இதில் பொரி முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அந்த வகையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூரில் பாரம்பரியமாக பொரி தயாரிக்கும் நிறுவனங்களில் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே சீனிவாசபுரம் பகுதியில் பொரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் கந்தசாமி குடும்பத்தினர், தற்போது ஆயுதபூஜையையொட்டி அந்த பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கென அந்த பகுதியில் தனியாக ஒரு சிறிய ஆலை அமைத்து நவீன எந்திரங்கள் மூலம் அரிசியை பக்குவப்படுத்தி பொரியாகவும், நிலக்கடலையை வறுக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து பொரி தயாரிக்கும் தொழிலாளர்களிடம் கேட்ட போது கூறியதாவது:-

அனைத்து வகை அரிசியிலும் பொரி தயாரிக்க முடியாது. எனவே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஐ.ஆர்.50, ஐ.ஆர்.64 என்கிற ரக அரிசியை கொள்முதல் செய்து வருகிறோம். பின்னர் அந்த அரிசியை தண்ணீரில் ஊற வைத்து உப்பு, நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றை சேர்த்து காய வைக்க வேண்டும். பின்னர் அதனை மிதமாக சூடேற்றுவது உள்ளிட்ட பக்குவங்களை செய்ய வேண்டும். பின்னர் பொரி தயாரிக்கும் உலையின் கீழ்பாகத்தில் மரத்துண்டுகள் உள்ளிட்டவற்றை போட்டு எரித்து வெப்பப்படுத்த வேண்டும். அப்போது அந்த பக்குவப்படுத்தப்பட்ட அரிசியை அந்த எந்திரத்தில் போட்டு பொரியாக தயாரிக்கப்படுகிறது. இதே போல் நவீன மோட்டார் எந்திரம் மூலம் நிலக்கடலையை வறுத்து பக்குவப்படுத்தும் பணிகளும் இங்கு நடக்கிறது, என்றனர்.

கடந்த ஆண்டு 60 பக்கா பிடிக்கக்கூடிய ஒரு மூட்டை பொரி ரூ.600 என விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு மூட்டை பொரி ரூ.700-க்கு விற்பனையாகி வருகிறது. மற்றபடி சில்லரை விலையில் ஒரு பக்கா ரூ.15-க்கு பொரி விற்கப்படுகிறது. நிலக்கடலை ஒரு கிலோ கடந்த ஆண்டு ரூ.140-க்கு விற்றது. ஆனால் தற்போது கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொட்டுக் கடலை ஒரு கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயுதபூஜையையொட்டிய காலத்தில் மட்டும் வழக்கமாக 10 ஆயிரம் மூட்டைகள் பொரி தயாரிக்கப்பட்டு விற்பனை நடைபெறும்.

ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் இந்தாண்டு 7 ஆயிரம் மூட்டைகள் மட்டுமே பொரி தயாரிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பொரி விற்பனை 30 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்ளது. தற்போது கரூர், வெள்ளியணை, க.பரமத்தி, உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தேடி வந்து பொரியினை கொள்முதல் செய்கின்றனர்.

Next Story