வேலூர் அருகே விமான நிலைய விரிவாக்க பணிகளை கதிர்ஆனந்த் எம்.பி. ஆய்வு


வேலூர் அருகே விமான நிலைய விரிவாக்க பணிகளை கதிர்ஆனந்த் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 23 Oct 2020 2:27 PM GMT (Updated: 23 Oct 2020 2:27 PM GMT)

வேலூர் அருகே விமான நிலைய விரிவாக்க பணிகளை கதிர்ஆனந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்,

வேலூர் அருகே அப்துல்லாபுரத்தில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர்ஆனந்த் மற்றும் அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் கதிர்ஆனந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது.

நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் விமான நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக கூறினோம். அதன்படி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டு, துறை சார்ந்த மந்திரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விமான நிலைய பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

இன்னும் 4 மாத காலத்துக்குள் பணிகள் முழுவதும் நிறைவு பெறும். இதனிடையே உள்ள தார்வழி சாலை பிரச்சினையாக இருந்தது. இதனால் நெடுஞ்சாலைத்துறைக்கும், விமான நிலைய ஆணையத்துக்கும் பல நாட்களாக மனக்கசப்பு இருந்தது. இருதரப்பிடம் பேசி தீர்வு காணப்பட்டு, மாற்றுச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

19 இருக்கைகள் கொண்ட சிறிய வகை விமானங்கள் இயக்கப்படும். வருங்காலங்களில் தேவைப்பட்டால் பெரிய விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு தனியார் நிறுவனம் விமானத்தை இயக்க தயார் நிலையில் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட இடத்தில் பணிகளை தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிடப்பில் கிடந்த கோப்புகளை தேடி எடுத்து தூசி தட்டி உள்ளனர்.

திடீரென கலெக்டர், பள்ளி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். அங்கு என்ன வகையான திட்டங்கள் உள்ளது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் அ.தி.மு.க.வின் ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர் போல் செயல்படுகிறார். தேர்வு செய்யப்பட்ட இடம் தகுதி வாய்ந்த இடமா?, மத்திய அரசு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தார்களா?, அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு உண்மையா? அல்லது காகித அறிவிப்பா? என்பது குறித்து தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது விமான நிலைய ஆணைய பொது மேலாளர் (சென்னை) விநாயகமூர்த்தி, விமான நிலைய பொறுப்பாளர் துரைமேநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story