வேலூர் மாவட்டத்தில் 14 ஏரிகளில் ரூ.4½ கோடியில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் தகவல்


வேலூர் மாவட்டத்தில் 14 ஏரிகளில் ரூ.4½ கோடியில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 Oct 2020 2:39 PM GMT (Updated: 23 Oct 2020 2:39 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 14 ஏரிகளில் ரூ.4½ கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.

வேலூர்,

காட்பாடி தாலுகாவில் பொதுப்பணித்துறை (நீர்வளம்) சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சித்தேரி ஏரி, கெம்பராஜபுரம் ஏரி, சேர்க்காடு ஏரி, இளையநல்லூர் ஏரி, எருக்கம்பட்டு ஏரி ஆகிய 5 ஏரிகளில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். மேலும் பொன்னை அணைக்கட்டிலிருந்து 18 ஏரிகளுக்கு செல்லும் மேற்கு பிரதான கால்வாய்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது.

வேலூர் மாவட்டத்தில் 2020-2021-ம் நிதியாண்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14 ஏரிகள் ரூ.4 கோடியே 69 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் காட்பாடி தாலுகாவில் உள்ள செம்பராயநல்லூர் ஊராட்சியில் சித்தேரி ஏரி ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைப்பெறுகிறது. அந்த ஏரியில் கரைகள் பலப்படுத்தும் பணிகளும், நீர்வரத்து கால்வாய், நீர் வெளியேற்று கால்வாய்கள் சீர்செய்து 70 சதவீதப்பணிகள் முடிவடைந்துள்ளது.

கெம்பராஜபுரம் ஊராட்சியில் உள்ள கெம்பராஜபுரம் ஏரி ரூ.46 லட்சம் மதிப்பில் கரைகள் பலப்படுத்தும் பணிகளும், நீர்வரத்து கால்வாய், நீர் வெளியேற்று கால்வாய்கள் சீர்செய்து 70 சதவீதப்பணிகள் முடிவடைந்துள்ளது

சேர்க்காடு ஏரி ரூ.19 லட்சம் மதிப்பில் ஏரி கரைகள் பலப்படுத்தும் பணிகளும், நீர் வெளியேற்று கால்வாய்கள் சீர்செய்து 70 சதவீதப்பணிகள் முடிவடைந்துள்ளது. ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்படும். இளையநல்லூர் ஏரி ரூ.29 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலும், எருக்கம்பட்டு ஏரி ரூ.20 லட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஏரிகளுக்கு வரும் மூங்கலேரி ஓடை கால்வாய் தூர்வாரி 80 சதவீதம் பணி நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை முடித்து பொன்னை அணைக்கட்டிலிருந்து மேற்கு பிரதான கால்வாய் வழியாக பாசன வசதி பெறும் 18 ஏரிகளில் 12 ஏரிகள் இதுவரை நிரம்பி உள்ளது. மேலும் உள்ள 6 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை தூர்வாரி தண்ணீர் நிரப்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர்கள் குணசீலன், விஸ்வநாதன், தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story