எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு நவம்பர் 17-ந் தேதி முதல் கர்நாடகத்தில் கல்லூரிகள் திறப்பு


எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு நவம்பர் 17-ந் தேதி முதல் கர்நாடகத்தில் கல்லூரிகள் திறப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 10:18 PM GMT (Updated: 23 Oct 2020 10:18 PM GMT)

பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்த உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கர்நாடகத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந் தேதி முதல் கல்லூரிகளை திறப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. நாட்டில் தினமும் புதிய உச்சத்தை தொட்டு வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைய தொடங்கி உள்ளது.

பெற்றோரின் அனுமதி

கொரோனா பாதிப்பு இருந்தாலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களை தவிர அனைத்து தொழில் நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி-கல்லூரிகள் மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து உயர்கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், கல்வித்துறை, போக்குவரத்து, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா உயர்கல்வித்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் இன்று (நேற்று) ஆலோசனை நடத்தினார். இதில் கர்நாடகத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந் தேதி கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது என்ஜினீயரிங் கல்லூரி, டிகிரி கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் கல்லூரிக்கு வர வேண்டும். கல்லூரிக்கு நேரடியாக வர விருப்பம் இல்லாதவர்கள் ஆன்லைன் மூலமான கல்வியை தொடர்ந்து பயிலலாம்.

செய்முறை கல்வி

கல்லூரிகளில் கொரோனா பரவுவதை தடுக்க தேவையான அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கல்லூரிகளுக்கு மாணவர்களின் வருகை அடிப்படையில் வகுப்புகளை காலை மற்றும் மாலையில் குழுவாக பிரித்து நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தீவிரமாக முன் ஆலோசனை நடத்தி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று மாணவர்களின் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா தடுப்பு தொடர்பாக செயல்படை ஒன்று அமைக்கப்படும். மாணவர்கள் கட்டாயம் கல்லூரிக்கு நேரில் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. செய்முறை கல்விக்கு மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வரவேண்டியுள்ளது. கற்பித்தலுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நடப்பு மாதத்தில் இருந்து ஆன்லைன் கற்பித்தல் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக மானிய குழு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகளை திறக்கிறோம்.

கற்றல் நிர்வாக நடைமுறை

முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 17-ந் தேதி கற்றல் நிர்வாக நடைமுறையை(எல்.எம்.எஸ்.) தொடங்கி வைக்கிறார். நாட்டிலேயே இந்த நடைமுறை கர்நாடகத்தில் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும். ஆசிரியர்களுக்கு தரமான பயிற்சி கிடைக்கும். இது ஒரு புரட்சிகரமான திட்டம் ஆகும். மாணவர்கள் தங்கும் விடுதிகளிலும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ஒருவேளை மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களை விடுதிகளில் தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்க தேவையான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்குவது குறித்து முதல்-மந்திரி ஆலோசித்து முடிவு எடுப்பார். தொற்றுநோய் நெருக்கடி காலத்தில் மக்களை காக்கும் பணியை அரசு செய்கிறது. அந்த வகையில் தடுப்பூசியை அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story