தேனி அருகே 4 கோழிக்குஞ்சுகளை விழுங்கிய நல்லபாம்பு சண்டை சேவலையும் கொன்றது


தேனி அருகே 4 கோழிக்குஞ்சுகளை விழுங்கிய நல்லபாம்பு சண்டை சேவலையும் கொன்றது
x
தினத்தந்தி 24 Oct 2020 6:08 PM GMT (Updated: 24 Oct 2020 6:08 PM GMT)

தேனி அருகே கோழிக்கூண்டுக்குள் புகுந்த நல்லபாம்பு, அங்கிருந்த 4 கோழிக்குஞ்சுகளை விழுங்கியதுடன், சண்டை சேவலையும் கொன்றது.

தேனி,

தேனி அருகே அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் வசித்து வருபவர் செல்வம். இவர் தனது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். சமீப காலமாக இவருடைய வீட்டில் வளர்த்து வரும் கோழிக்குஞ்சுகள் மாயமாகி வந்தன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் மாயமாகின. அக்கம் பக்கத்தில் தேடியும் கோழிக்குஞ்சுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் செல்வம் தனது கோழிக் குஞ்சுகள் மற்றும் சண்டை சேவல்களை கூண்டுகளில் அடைத்து வைத்து இருந்தார். இதற்கிடையே நேற்று காலையில் ஒரு கூண்டுக்குள் இருந்து கோழிகள் சத்தம் எழுப்பின. இதனால், செல்வம் அந்த கூண்டை திறந்து பார்த்த போது அதற்குள் ஒரு நல்ல பாம்பு கோழிக்குஞ்சுகளை விழுங்கிக்கொண்டு இருந்தது.

அந்த கூண்டுக்குள் 6 கோழிக் குஞ்சுகள், ஒரு கோழி, ஒரு சண்டை சேவல் ஆகியவை இருந்தன. இதில், ஒரு கோழிக் குஞ்சு, பாம்பு கூண்டுக்குள் நுழைந்த ஓட்டை வழியாக வெளியேறி உயிர் தப்பியது. 4 கோழிக்குஞ்சுகளை பாம்பு விழுங்கி விட்டது. மேலும், சண்டை சேவல், கோழிக்குஞ்சு மற்றும் ஒரு கோழி ஆகியவை பாம்பு கடித்ததில் உயிரிழந்து கிடந்தன.

இதையடுத்து அவர் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணன் என்பவருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த கண்ணன் அந்த பாம்பை பிடித்தார். அது சுமார் 7 அடி நீளம் கொண்டது. பாம்பு பிடிபட்டதும் அதை பார்க்க அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் அங்கு குவிந்தனர். பின்னர், பாம்பை பிடித்த கண்ணன், அதை தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

Next Story