வில்லியனூர் அருகே பயங்கரம்: மதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வில்லியனூர் அருகே பயங்கரம்: மதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Oct 2020 2:16 AM GMT (Updated: 25 Oct 2020 2:16 AM GMT)

வில்லியனூர் அருகே மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வில்லியனூர், 

வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் பகுதியில் தனியார் மதுக்கடை உள்ளது. இங்கு நேற்று இரவு வழக்கம்போல் மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் இரவு 7.30 மணி அளவில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று மதுக்கடை மீது வெடிகுண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் கடையில் இருந்த மதுபிரியர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். கடையின் சுவரில் விழுந்து குண்டு வெடித்ததால் அங்கிருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

அதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு வீசிய நபர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? யாரையும் கொலை செய்யும் நோக்கில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது மாமூல் கேட்டு கடை உரிமையாளரை மிரட்டுவதற்காக வீசப்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுக்கடை மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story