மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்: தொழிலாளி அடித்துக்கொலை; தந்தை கைது


மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்: தொழிலாளி அடித்துக்கொலை; தந்தை கைது
x
தினத்தந்தி 27 Oct 2020 6:27 AM GMT (Updated: 27 Oct 2020 6:27 AM GMT)

வேதாரண்யம் அருகே மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வேதாரண்யம், 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலம் கிராமம் கோவில்குத்தகை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது78). இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நாகராஜனுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவரது முதல் மகன் கார்த்திகேயன். 2-வது மகன் முருகையன்(42).

கூலித்தொழிலாளியான முருகையனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு இவர் மதுஅருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு திண்ணையில் தண்ணீர் இறைக்கும் மோட்டார் வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த முருகையன் என் தாய் தூங்கிய இடத்தில் யார் இந்த மோட்டாரை வைத்தது என கேட்டார். பின்னர் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து தனது தந்தை நாகராஜனை தாக்க முயன்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் நாகராஜன் மரக்கட்டையால் தனது மகன் முருகையனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த முருகையன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கைது

இது குறித்து தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து முருகையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து முருகையனின் அண்ணன் மனைவி தேவி கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முருகையன் கடந்த பல ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு மாயமாகி வெளியூரில் வசித்து வந்தார். இவர் தனது தாய் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தனது வீட்டுக்கு வந்துள்ளார். பல ஆண்டுகள் மாயமாகி இருந்த மகனை கண்டு மகிழ்ச்சி அடைந்த தாய் அவர் மீது மிகுந்த அன்பு செலுத்தினார். இந்தநிலையில் தனது தாய் இறந்ததால் மிகுந்த மனவேதனையில் இருந்த முருகையன் அடிக்கடி மது அருந்த தொடங்கினார்.

இந்த மதுப்பழக்கமே தற்போது முருகையன் உயிருக்கு எமனாக மாறி உள்ளது.

மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளியை தந்தை அடித்துக்கொன்ற சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story