அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள்


அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 29 Oct 2020 12:08 AM GMT (Updated: 29 Oct 2020 12:08 AM GMT)

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன்சர்மா ஆலோசனை நடத்தினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரசித்திபெற்ற சனிபகவான் கோவிலில் 2½ ஆண்டுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி வரும் டிசம்பர் மாதம் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் இடம் பெயர்கிறார்.

இதையொட்டி சனிபகவானை தரிசிக்க புதுவை, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமையில் முதற்கட்ட ஆலோசனை கூட்டம் திருநள்ளாறு சனிபகவான் கோவில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், கோவில் நிர்வாக அதிகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல், சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி சனிப்பெயர்ச்சி விழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். அதற்காக அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை நடத்தினார்.

சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் செய்வது, கொரோனா காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


Next Story