விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் இணைப்பு துண்டிப்பு மின்துறை எச்சரிக்கை


விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் இணைப்பு துண்டிப்பு மின்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2020 9:40 PM GMT (Updated: 29 Oct 2020 9:40 PM GMT)

விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மின்துறையானது பேரிடரால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது. தற்போது பருவமழையையொட்டி ஏற்படும் மின்தடையை உடனுக்குடன் அறியும் ஒரு அவசரகால கட்டுப்பாட்டு அறை மின்துறை தலைமை அலுவலகத்தில் முழுநேரமும் இயங்கி வருகிறது.

இதனை பொதுமக்கள் 0413-2339532 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-1912 அல்லது 1912 என்ற எண்ணின் மூலமாகவோ மின்துறைக்கு தெரியப்படுத்தலாம்.

அறுந்து விழுந்த அல்லது சேதமான மின்கம்பிகளை பொதுமக்கள் பார்த்தால் அவற்றை தொட வேண்டாம். மின்துறை தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவேண்டும். மழைக்காலங்களில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஈ.எல்.சி.பி. எனப்படும் மின்கசிவு தடுப்பான்களை வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்த வேண்டும்.

விவசாய நிலங்களில் எலி, காட்டுப்பன்றி ஆகியவற்றிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விளை நிலங்களை சுற்றி சிலர் மின்வேலிகளை அமைக்கின்றனர். இதில் சில நேரங்களில் மனிதர்களும் சிக்கி உயிரிழக்கிறார்கள். விவசாய நிலங்களில் மின் வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், இழப்புகளுக்கும் மின்நுகர்வோரே பொறுப்பு ஏற்க வேண்டும். மின் வேலி அமைப்பது கண்டறியப்பட்டால் மின்நுகர்வோரின் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story