காதல் மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


காதல் மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Oct 2020 5:29 AM GMT (Updated: 30 Oct 2020 5:29 AM GMT)

விக்கிரமசிங்கபுரம் அருகே காதல் மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோடாரங்குளம் ஏகாம்பரம் காலனியைச் சேர்ந்தவர் பால்துரை மகன் முத்து முருகன் (வயது 21), கூலி தொழிலாளி. இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் மகள் காயத்ரி (19). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

காயத்ரி வீட்டாரின் சம்மதம் இல்லாமல், இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின், காயத்ரி தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், அதே ஊரில் இருவரும் தனிக்குடித்தனம் சென்றனர்.

தொழிலாளி தற்கொலை

கடந்த மாதம் 11-ந் தேதி காயத்ரி தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காயத்ரியின் தாயார் ராஜேசுவரி விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், திருமணமாகி 3 மாதத்தில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதால், அவரது சாவு குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் காதல் மனைவி இறந்த வேதனையில் முத்து முருகன் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த முத்து முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு சம்பவம்

திருக்குறுங்குடியை அடுத்த தளவாய்புரம் காலனி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (50). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் பெருமாள் தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து அவதூறாக பேசினார். இதனை மகன் இசக்கிதுரை கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த பெருமாள் இரவில் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருக்குறுங்குடி போலீசார் விரைந்து சென்று, பெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story