தேனி அருகே பட்டுப்போன மரம் விழுந்து தந்தை-மகன் பலி மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்


தேனி அருகே பட்டுப்போன மரம் விழுந்து தந்தை-மகன் பலி மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 5 Nov 2020 9:15 AM GMT (Updated: 5 Nov 2020 9:15 AM GMT)

தேனி அருகே பட்டுப்போன மரம் சாய்ந்து விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனி,

தேனி அருகே உள்ள பூமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 75). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மகன் சிவக்குமார் (40). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். சிவக்குமாருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று காலை சிவக்குமாரும், பெருமாளும் தேனி அருகே அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கான கேண்டீனுக்கு பொருட்கள் வாங்க சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் பூமலைக்குண்டுவுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை சிவக்குமார் ஓட்டிச் சென்றார். பெருமாள் பின்னால் அமர்ந்திருந்தார்.

அரண்மனைப்புதூர்-காமாட்சிபுரம் சாலையில் கொடுவிலார்பட்டியை அடுத்த நாகலாபுரம் அருகில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையோரம் பட்டுப்போன நிலையில் நின்ற மரம் ஒன்று திடீரென்று வேரோடு சாய்ந்து, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

இதில், சிவக்குமார் ஹெல்மெட் அணிந்து இருந்த போதிலும் மரத்தின் பெரிய கிளை ஒன்று அவரது தலை மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சிவக்குமார் பலியானார். மேலும் பெருமாள் பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். மேலும் தகவல் அறிந்து பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் தலைமையில் போலீசாரும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயம் அடைந்த பெருமாளை, அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான சிவக் குமார் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அங்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பெருமாள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரம் முறிந்து விழுந்த விபத்தில் தந்தை-மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முறிந்து விழுந்த மரமானது தீக்குச்சிகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ‘பீனாரி’ என்று அழைக்கப்படும் மரம் ஆகும். இது முருங்கை மரம் போன்று வலுவற்ற மரம். பல மாதங்களாக சாலையோரம் இந்த மரம் பட்டுப்போன நிலையில் இருந்ததால் விபத்து ஏற்படும் முன்பு அதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அந்த மரம் அகற்றப்படாததால் தற்போது அது 2 உயிர்களை காவு வாங்கிவிட்டது. இதேபோல், பட்டுப்போன நிலையில் இந்த சாலையில் பல மரங்கள் உள்ளன. எனவே இதுபோன்று விபத்து ஏற்படும் முன்பு அவற்றை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story