மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு


மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 5 Nov 2020 2:46 PM GMT (Updated: 5 Nov 2020 2:46 PM GMT)

மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

ஊட்டி

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் நீலகிரி கிளைகள் சார்பில், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மின் வளாகம் முன்பு நேற்று நடைபெற்றது.

போராட்டத்துக்கு மின்வாரிய ஐக்கிய சங்க வட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். பொறியாளர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பொறியாளர் சங்க கிளை செயலாளர் கமல்குமார் பேசினார்.

தர்ணா போராட்டத்தில் பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அன்றாட மின் தடை நீக்க பணிகள், மின் கட்டணம் வசூலிக்கும் பணி, புதிய விண்ணப்ப பதிவு, ஆய்வு பணி, அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் கட்டண வசூல் பிரிவு மூடப்பட்டு இருப்பதை பார்த்து திரும்பி சென்றனர். ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் குந்தா மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மற்றும் மசினகுடி மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மசினகுடி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மின்வாரிய பொறியாளர் சங்க வீரப்பன் அனைவரையும் வரவேற்றார். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, சசிகுமார், சிவக்குமார், லாசர், அலி ரகுமான் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story