பாடாலூர் அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி பெண் பலி சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்


பாடாலூர் அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி பெண் பலி சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Nov 2020 11:20 PM GMT (Updated: 5 Nov 2020 11:20 PM GMT)

பாடாலூர் அருகே சாலையோர தடுப்பில் கார் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

பாடாலூர், 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் என்ற இடத்தில் நேற்று காலை சென்னை ஆலப்பாக்கம் கணபதி நகரில் உள்ள எட்வின்-ரெக்சலின் சாந்தி(வயது 50) என்ற தம்பதியினருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் ஜெயபால் (46). இவரது மனைவி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். ஆகவே, இந்த தம்பதியரின் மகன்கள் ஹரிபிரசாத் (12), மித்லேஷ் (10) ஆகிய இருவரும் ரெக்சலின் சாந்தி பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நாகர்கோவில் மாவட்டம், ராமன்புதூர் அருகே கோணம் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது சித்தியை பார்க்க ரெக்சலின் சாந்தி ஒரு காரில் புறப்பட்டார். அவருடன் ஜெயபால் மற்றும் அவரது 2 மகன்களும் சென்றிருந்தனர். பின்னர், அங்கிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவர் அந்தோணி தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது.

பெண் பலி

இந்த விபத்தில் ரெக்சலின் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெயபால் மற்றும் அவரது 2 மகன்கள், கார் டிரைவர் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story