தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் தொடரும் சம்பவம்: மீன்பிடிக்க சென்ற போது கடலில் மூழ்கியவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்


தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் தொடரும் சம்பவம்: மீன்பிடிக்க சென்ற போது கடலில் மூழ்கியவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Nov 2020 5:57 AM GMT (Updated: 6 Nov 2020 5:57 AM GMT)

மீன்பிடிக்க சென்ற போது குமரி கடலில் மூழ்கிய மீனவரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

புதுக்கடை, 

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தில் அதிகளவில் மணல் திட்டுகள் உருவாகி உள்ளது. இதனால், ராட்சத அலைகள் எழுவதால் கரையில் இருந்து மீன்பிடிக்க செல்லும் படகுகள் அதில் சிக்கி கவிழ்ந்து பல மீனவர்கள் பலியாகி வரும் சோக சம்பவம் நீடிக்கிறது.

இந்தநிலையில் நேற்று மீண்டும் மீனவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் படகில் இருந்து மீனவர் ஒருவர் தவறி விழுந்தார். இதனால் கடலில் மூழ்கிய அவரின் கதி என்னவென்று தெரியவில்லை.

மீண்டும் ஒரு மீனவர்...

அந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தேங்காப்பட்டணம் பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நசரேத் மகன் பிரடி என்ற பெரின்(வயது 36). பெரினுக்கு மெர்சி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தனக்கு சொந்தமான வள்ளத்தில் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த 8 மீனவர்களும் சென்றனர். அவர்கள் புறப்பட்ட சிறிது நேரத்தில் முகத்துவாரத்தை கடக்க முயன்றபோது திடீரென எதிர்பாராத விதமாக பெரின் படகில் இருந்து தவறி விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் உடனே, அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் பெரின் கடலில் மூழ்கினார். இதனால், அவரை மீட்க முடியவில்லை.

தேடும் பணி

இதையடுத்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுக்கடை போலீசார் மற்றும் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். மேலும், குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசாரும் விரைந்து வந்து மீனவர்களுடன் இணைந்து கடலில் மூழ்கிய பெரினை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் இரவு வரையும் பெரினை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இதற்கிடையே அப்பகுதியில் பாதுகாப்பிற்காக அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தால் பூத்துறை கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். 

Next Story