தாயை போல் தாய் மொழிக்கும் கவுரவம் கொடுக்க வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு


தாயை போல் தாய் மொழிக்கும் கவுரவம் கொடுக்க வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 7 Nov 2020 9:45 PM GMT (Updated: 8 Nov 2020 1:25 AM GMT)

தாயை போல் தாய்மொழிக்கும் கவுரவத்தை கொடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று கன்னட கலாசாரத்துறை சார்பில் ராஜ்யோத்சவா தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், கர்நாடகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 65 சாதனையாளர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கப் பட்டது. இந்த விழாவை முதல்-மந்திரி எடியூரப்பா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் 65 சாதனையாளர்களுக்கும் முதல்-மந்திரி எடியூரப்பா ராஜ்யோத்சவா விருந்து வழங்கி கவுரவித்தார். 65 சாதனையாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம், 25 கிராம் தங்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கர்நாடக மாநிலம் உருவான கடந்த 1-ந் தேதி, ராஜ்யோத்சவா தினத்தில் இந்த விருதுகள் வழங்கப்படும். கொரோனா காரணமாக அன்றைய தினம் விருது வழங்கப்படவில்லை. இதனால் நேற்று 65 சாதனையாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

கன்னடம் தான் கர்நாடகத்தின் ஆட்சி மொழியாகும். ஆட்சி மொழியான கன்னடத்திற்கு எப்போதும் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அரசின் நிர்வாகத்தில் அனைத்து நிலைகளிலும் கன்னட மொழியை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னட மொழியை பாதுகாக்கவும், வளர்ச்சிக்காகவும் கர்நாடக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். கன்னட மொழியின் வளர்ச்சி மற்றும் அதனை பாதுகாக்க கடந்த நவம்பர் 1-ந் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் 31-ந் தேதி வரை கன்னட வளர்ச்சி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட வளர்ச்சி ஆண்டுக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அது செயல்படுத்தப்படும். நாம் தினமும் கன்னட மொழியை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வேண்டும். பேசும் போது கன்னட மொழியை அதிகமாக பயன்படுத்தினால், மொழி வளர்ச்சி அடைவதுடன், பாதுகாக்கப்படும். கன்னட மொழியை கர்நாடகத்தில் பயன்படுத்தாவிட்டால், வேறு எங்கு பயன்படுத்த முடியும்.

கர்நாடகத்தில் வசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் கன்னட மொழி நிறைந்திருக்கிறது. அது வர்த்தக மொழியாகவும் மாற வேண்டும். ஒரு மொழியை பயன்படுத்தாமல் விட்டால் அழிந்து விடும். இந்த நவீன காலத்தில் உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தபடி கன்னட மொழியையும் தயார்படுத்த வேண்டும். மொழியும், தாய் மண்ணும் தாயை போல மகத்துவம் வாய்ந்ததாகும். தாய்க்கு கொடுக்கும் கவுரவத்தை தாய் மொழிக்கும், தாய் மண்ணுக்கும் வழங்க வேண்டும்.

கன்னட மொழியை போன்று மகத்தான மொழி வேறு எதுவும் இல்லை என்று கவிஞர் குவெம்பு கூறியுள்ளார். கன்னட மொழியின் சக்தி, உணர்ச்சி பெருக்கு வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்று கவிஞர் குவெம்பு கூறி இருப்பதை நினைத்து பார்க்க வேண்டும். ராஜ்யோத்சவா தினத்தில் சிறந்த சாதனையாளர்களுக்கு உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்படும். அதுபோல, இந்த ஆண்டு 65 சாதனையாளர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த சாதனையாளர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மந்திரி சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story